தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் உலக ஈரநில பாதுகாப்பு தின விழா.
ராணிப்பேட்டை, ஜன.24. இராணிப்பேட்டை மாவட்டம், மழையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உஷா ஆணைப்படி, தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில் உலக ஈரநில பாதுகாப்பு தின விழா நேற்று (23.01.2024) கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில், கிரீன் டிரஸ்ட் இயக்குநர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளரான டாக்டர் மார்கசகாயம் ஈரநிலங்களை காப்பது குறித்த துண்டு பிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமையாசிரியர் பரணி தலைமை தாங்கினார். மாவட்ட பசுமைத்தோழர் செல்வி ஏஞ்சலின் சூசைநாயகி ஈரநிலங்களின் புள்ளி விவரங்களை அளித்து பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மாவட்ட ஜே.ஆர்.சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் கிருபானந்தம், ஈரநிலங்கள் பற்றிய விளக்கமளித்து, மாங்குரோவ் சதுப்புநிலங்கள் குறித்து விளக்கினார். பின்னர் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் கிராம வீதிகளின் வழியே சென்று துண்டு பிரசுரங்களை மக்களிடையே வழங்கினர்.
பின்னர், மனிதசங்கிலி நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதில் ஆசிரியர்கள் மற்றும் 168 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
பள்ளி தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் நன்றி கூறினார்.
Comments
Post a Comment