ஸ்ரீ சென்னபுரி தேவாங்கர் சங்கம் மற்றும் தேவாங்கர் எழுச்சி இயக்கம் இணைந்து நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி!

ஸ்ரீ சென்னபுரி தேவாங்கர் சங்கம்  மற்றும் தேவாங்கர் எழுச்சி இயக்கம் இணைந்து நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி!
சென்னை, அக்.13- 
சென்னையில் ஸ்ரீ சென்னபுரி தேவாங்கர் சங்கம்  மற்றும் தேவாங்கர் எழுச்சி இயக்கம் இணைந்து நடத்திய சுயம்வரம் நிகழ்ச்சி சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் (08.10.2023) ஆம் தேதியன்று நடைபெற்றது.
            சின்னாளப்பட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தேவாங்கர் எழுச்சி இயக்கம், மாணவர்களுக்கான இலவச கல்வி ஆலோசனை, இலவச வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், இலவச திருமண இணைய வழிக் குழு, அனைத்து சொந்தத்  தொழில் புரிபவர்களின் சங்கமம் போன்ற பல சமுதாய சேவைகளை தன் சமூக மக்களின் முன்னேற்றத்திற்காக செய்துவரும் ஒரு முன்னோடி இயக்கமாக இருந்து வருகிறது.
             இதன் தொடர்ச்சியாக சுயம்வரம் எனும் திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெற்றோர்களின் வசதிக்காக தன் சமூக வரன் தேடும் மக்களின் சங்கமம் நிகழ்வு மிகச் சிறப்பாக சென்னை, பழைய வண்ணாரப்பேட்டையில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் நடைபெற்றது.
         இந்நிகழ்வை தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மற்றும் சென்னாபுரி தேவாங்க சங்க நிர்வாகிகள் அனைவரும் ஒன்றிணைந்து தேவாங்கர் மக்கள் வரன் தேடும் மக்கள் பாராட்டும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
         இந்நிகழ்வை, சங்கரலிங்கபுரத்தைச் சார்ந்த சென்னை வாழ் முக்கிய பிரமுகர்கள் வந்திருந்து வாழ்த்தினர். தேவாங்கர் எழுச்சி இயக்கத்தின் சார்பாக இதற்கு முன்னர், அருப்புக்கோட்டை, திருப்பூர், குமாரபாளையம் போன்ற இடங்களில் அடுத்தடுத்து சுயம்வரம் நிகழ்வை சிறப்பாக நடத்தி ஆயிரத்திற்கும் மேலான வரன்களை அறிமுகப்படுத்தி இதன் மூலம் 100-க்கும் மேற்பட்ட வரன்கள் இணைய இந்த இயக்கமானது சிறந்த தளம் அமைத்துக் கொடுத்துள்ளது.
     இதன் தொடர்ச்சியாக மக்கள் விரும்பிக் கேட்டதின் பேரில், அடுத்த சுயம்வர நிகழ்வு திருவண்ணாமலை மாவட்டம், திருப்பத்தூரில் வருகின்ற 29.10.2023 அன்று நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இதன்  நிர்வாக அறங்காவலர் சவுண்டையன், தலைவர் ஜெயபால் மற்றும் நிர்வாகச் செயலாளர் கபீர்தாஸ், பொருளாளர் விஜயபாஸ்கர், துணைத் தலைவர் வீனஸ் பாலு, மக்கள் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப அமைப்புச் செயலாளர் சிவக்குமார், துணைச் செயலாளர் யுவராஜ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Comments