ஏரியில் மண் அள்ளுவதை தடுத்த தனிநபருக்கு கொலை மிரட்டல் விடுத்த கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு!

ஏரியில் மண் அள்ளுவதை தடுத்த தனிநபருக்கு கொலை மிரட்டல் விடுத்த கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு!
.    ராணிப்பேட்டை, செப்.04- 
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு மோட்டூர் ஏரியில்,  பறக்கும் சாலை அமைக்க மண் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்திய தனிநபருக்கு மிரட்டல் விடுத்த கிராம ஊராட்சி மன்ற தலைவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
         சென்னை-பெங்களூரு பறக்கும் சாலை அமைக்க செங்காடு மோட்டூர் ஏரியிலிருந்து மண் எடுக்கும் பணிகள் இருதினங்களுக்கு முன்பு தொடங்கியது.      
        ஏற்கனவே, ஏரியில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயம்  பாதிக்கப்பட்டு உள்ளதால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் மண் எடுக்க வந்த இயந்திரங்களை தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
       இதனைத் தொடர்ந்து மண் எடுக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனைத் தடுத்து நிறுத்திய பாலாஜி என்ற தனிநபருக்கு தகரகுப்பம் மற்றும் செங்காடு ஆகிய இரு கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் கொலை  மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.      
        இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் வாலாஜாபேட்டை போலீசார் தகரகுப்பம் கிராம ஊராட்சி மன்ற தலைவர் சிவக்குமார் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிணையில் விடுவித்தனர். 
        மேலும் செங்காடு கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேவேந்திரனை தேடி வருகின்றனர். ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்திய தனிநபருக்கு ஊராட்சி மன்ற தலைவர் கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments