சந்திராயன்-3 வெற்றி இந்திய திருநாட்டின் ஒரு மகத்தான மைல்கல்: நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் திமுக சார்பில் கலந்து கொண்டு ஆற்றிய உரை!
சந்திராயன்-3 வெற்றி இந்திய திருநாட்டின் ஒரு மகத்தான மைல்கல்: நாடாளுமன்ற மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் திமுக சார்பில் கலந்து கொண்டு ஆற்றிய உரை!
சந்திராயன்-3 திட்டத்தின் மகத்தான வெற்றி குறித்து நாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் (21.09.2023) நடைபெற்ற விவாதத்தில் வேலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கதிர் ஆனந்த் திமுக சார்பில் கலந்து கொண்டு ஆற்றிய உரை கீழ் வருமாறு:
மாண்புமிகு சபாநாயகர் அவர்களே!
இன்று, இந்த ஜனநாயகக் கோவிலில், இந்தியாவுக்கு மட்டுமல்ல, அனைத்து மனித இனத்திற்கும் வெற்றியை கொண்டாடுவதற்காக நாங்கள் இங்கு கூடியுள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
ஆம், சந்திராயன்-3 பணியின் வெற்றி இந்திய திருநாட்டின் ஒரு மகத்தான மைல்கல். மேலும் தமிழர்கள் என்ற பெருமையுடன், விண்வெளி ஆய்வுத்துறையில், நமது இந்திய நாட்டின் சாதனைகளில் இரட்டிப்பு மகிழ்ச்சியும், பெருமையும் உள்ளது.
பல்வேறு துறைகளில் முன்னோடியாகத் திகழ்ந்த தமிழ் மக்கள் வளமான வரலாற்றைக் கொண்டுள்ளனர். இன்று, விண்வெளியில் இந்தியா மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களில் அதே உணர்வு பிரதிபலிப்பதைக் காண்கிறோம்.
எங்கள் தமிழ் சமூகத்தை சேர்ந்த பலர் இந்த மகத்தான முயற்சியின் ஒரு பகுதியாக இருந்து, அவர்களின் நிபுணத்துவம், அறிவு மற்றும் ஆர்வத்துடன் பங்களித்துள்ளனர்.
நமது பண்டைய தமிழ் இலக்கியம், கவிதை, அழகு நடையில் பஞ்சபூதங்கள் அதாவது நீர், நெருப்பு, நிலம், காற்று, ஆகாயம் ஆகியவற்றை பற்றி பேசுகிறது. இந்த ஐந்தையும் வென்று எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த செயல்களை செய்யும் திறன் மனிதனுக்கு மட்டுமே உள்ளது.
இன்று, நம் முன்னோர்கள் கதை வசனங்களில் எழுதிய கனவுகள், இப்போது நட்சத்திரங்களை அடையும்போது நனவாகி வருவதைப் பார்க்கும் போது நம் இதயங்களை மகிழ்ச்சியில் நிரப்புகிறது.
சந்திராயன்-3 இன் பயணம் சந்திரனை அடைவது மட்டுமல்ல, கனவு காண துணிந்த எண்ணற்ற மனங்களின் பயணத்தையும் பற்றியது. இது இந்தியாவின் கூட்டு மனப்பான்மை மற்றும் தமிழ் சமூகம் இந்த துடிப்பான திரைக்கு சேர்க்கும் சிறப்புத் தொடர்பைப் பற்றியது.
கருத்தியல் ரீதியாக நாடுகள், மக்கள் பிளவுபட்டிருப்பதை அடிக்கடி பார்க்கும் உலகில், இந்தியாவின் விண்வெளித் திறனைப் பாராட்டுவதற்கு, உலகெங்கிலும் உள்ள மக்கள் ஒன்றிணைவதை காண்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
சந்திராயன்-3 பணி, நமது ஒரே இயற்கை செயற்கைக் கோளான சந்திரனைப் பற்றிய நமது புரிதலை விரிவு படுத்தியது மட்டுமல்லாமல், விண்வெளி ஆய்வுக் கலையில் நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதையும் இது காட்டுகிறது.
"சந்திராயன்" என்ற பெயர் "மூன்கிராஃப்ட்" என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடுவது போலவே, இந்த சந்திர ஆய்வானது, இந்தியாவின் கையொப்பத்தை சந்திரனின் மேற்பரப்பில் செதுக்கும் கருவியாக உள்ளது. மாணவச் செல்வங்கள் உட்பட நமது எதிர்கால சந்ததியினரை இன்னும் பெரிய கனவு காண தூண்டுகிறது.
அத்தகைய வெற்றியின் விளைவுகள் பன்மடங்கு, சந்திரனை படிப்பதன் மூலம் நாம் பெறும் விஞ்ஞான அறிவிற்கு அப்பால், தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், சுகாதாரம் மற்றும் தகவல் தொடர்பு முதல் போக்குவரத்து மற்றும் அதற்கு அப்பால் பல்வேறு துறைகளுக்கு பயனளிக்கும். மேலும், இது உலகளாவிய விண்வெளி சமூகத்தில் இந்தியாவின் முன்னணி நிலையை பலப்படுத்துகிறது. மேலும், வரும் ஆண்டுகளில் இன்னும் அதிக லட்சிய முயற்சிகளுக்கு வழி வகுக்கும்.
சந்திராயன்-3 திட்டத்தை அற்புதமாக வெற்றியடையச் செய்வதற்கு பங்களித்த ஒவ்வொரு நபரையும் சீரும் சிறப்புடன் பாராட்டுவோம். அவர்களின் அயராத முயற்சியாலும், தூக்கமில்லாத இரவுகளாலும், இணையற்ற பேரார்வத்தாலும், புது நம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் நட்சத்திரங்களை நோக்கிப் பார்க்கிறோம்.
சந்திராயன்-3 திட்டம் இந்தியாவின் வெற்றிக் கதை மட்டுமல்ல, முழு உலகிற்கும் உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாகும் என தனது உரையில் குறிப்பிட்டார்...
Comments
Post a Comment