பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் பணியை நிறைவு செய்த என்.எல்.சி. இந்தியா நிறுவனம்!
என்.எல்.சி.இந்தியா நிறுவனத்தின், சுரங்கம்-2 பகுதியில், நீண்ட காலமாக நிலுவையில் இருந்த, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றி அமைக்கும் மிக முக்கியமான பணி கடந்த 21-ஆம் தேதியன்று நிறைவடைந்தது.
பரவனாற்றுப் பாதையின், மொத்தமுள்ள 12 கி.மீ. நீளத்தில், 10.5 கி.மீ. நீளத்திற்கான ஆற்றுப் பாதை அமைக்கும் பணி, ஏற்கனவே முடிக்கப்பட்டிருந்த நிலையில் எஞ்சியிருந்த 1.5 கி.மீ. பகுதியில், பாதை அமைக்கும் பணியை, என்.எல்.சி இந்தியா நிறுவனம், கடந்த 26.07.2023 முதல் தொடங்கியது.
பரவனாற்றுப் பாதையின் தற்காலிக சீரமைப்புப் பணி நடைபெறும் இடமானது, சுரங்கம்-2ன் வெட்டு முகத்திலிருந்து வெகு அருகில், அதாவது, 60 மீட்டர் தொலைவில்தான் உள்ளது.
இந்த பரவனாறு, சுரங்கம்-2-ன், வட மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து 100 சதுர கிலோ மீட்டருக்கும் அதிகமான நீர் பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கப்பெறும் மழை நீரை கையாள வேண்டும். இந்த பகுதியில் பல கிராமங்களும், அந்த கிராமங்களைச் சுற்றி வயல்வெளிகளும் உள்ளன.
இடைவிடாத மற்றும் கனமழையின் போது ஏற்படக்கூடிய வெள்ளப் பெருக்கில் இருந்து, கிராம மக்களையும், விவசாய நிலங்களையும் பாதுகாத்திட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். இதற்கான அவசியம் மற்றும் தேவையை கருத்தில்கொண்டு, என்எல்சி இந்தியா நிறுவனம், அதற்கான ஒரு நிரந்தரத் தீர்வாக, பரவனாற்றுப் பாதையை நிரந்தரமாக மாற்றியமைக்கும் முக்கிய பணியை மேற்கொண்டது.
மொத்தம் 12 கி.மீ நீளமுள்ள, பரவனாற்றின் பாதையை, நிரந்தரமாக மாற்றியமைப்பதற்கான, தோராயமான பரப்பளவு 18 ஹெக்டேர் ஆகும்.
ஏற்கனவே, என்.எல்.சி.ஐ. சுரங்கங்கள் மூலம் பரவனாறு நீரால், ஆண்டு முழுவதும், பல ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. தற்போது பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதை அமைக்கப்படுவதால், பல ஏக்கர், கூடுதல் பரப்பளவிலான விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும்.
மேலும், பரவனாறு ஆற்றில் தொடர்ந்து இருந்து வரும் நீர் இருப்பின் காரணத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மேலும் அதிகரிக்கவும் இது உதவும்.
என்எல்சி இந்தியா நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட இந்த பரவனாறு நிரந்தர மாற்றுப் பாதைக்கான கால்வாய் அமைக்கும் பணியானது, அனைத்து கிராம மக்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள், கிராமத் தலைவர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குழுக்கள், கடலூர் மாவட்ட ஆட்சியர், தமிழக அரசு, நிலக்கரி அமைச்சகம், இந்திய அரசு மற்றும் அனைத்து பங்குதாரர்கள் ஆகியோர் வழங்கிய ஆதரவு மற்றும் ஒத்துழைப்பினால் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment