பெரியகுளம் நகராட்சி பொது மயானத்தில் காவல் துறை உயரதிகாரிகள் உட்பட தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில் இறந்து 16 நாட்களாக, நீதி கேட்டு, உடலை வாங்க மறுத்து வந்த பட்டியல் இன இளைஞர் உடல் நல்லடக்கம்: பெரியகுளத்தில் பரபரப்பு...

பெரியகுளம் நகராட்சி பொது மயானத்தில் காவல் துறை உயரதிகாரிகள் உட்பட தாசில்தார் மற்றும் வருவாய்துறையினர் முன்னிலையில்  இறந்து 16 நாட்களாக நீதி கேட்டு உடலை வாங்க மறுத்து வந்த  பட்டியல் இன இளைஞர் உடல் நல்லடக்கம்: பெரியகுளத்தில் பரபரப்பு... 
.   தேனி, ஆக.24-
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மாந்தோப்பு பகுதியில்  கடந்த 05.08.2023-ம் தேதி இருவேறு சமூகத்தைச் சார்ந்த இணையர்களான இளைஞர் மாரிமுத்து  மற்றும் 15 வயது சிறுமி  இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த தகவலை அடுத்து பெரியகுளம்  காவல்துறையினர்  இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரியகுளம் பகுதியில்  பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. 
    மேலும் அன்று மறுநாள்  சிறுமியின் உடலை அவரது உறவினர் என  ஒருவர் மட்டுமே காவல்துறையினரின்  அனுமதியுடன் வாங்கிச் சென்று  எரியூட்டியுள்ளார். மேலும் உயிரிழந்த மாரிமுத்துவின் உடலை  அவரது உறவினர்கள் மற்றும் தமிழ் தேச மார்க்சிய கழகத்தினர் வாங்க மறுத்து  இவர்களது சாவில் மர்மம் இருப்பதாகவும், இவை ஆணவ படுகொலை போல் உள்ளது என்று கூறி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக்கோரி  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை  முன்பு பல்வேறு ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் நடத்தினர்.
        அன்று முதல் தொடர்ந்து இரண்டு நாட்களாக  தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை  முன்பு பல கட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நீடித்து வந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ், பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி  இறந்த மாரிமுத்துவின் உடலை வாங்கிச் சென்றால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். 
      நடவடிக்கை மேற்கொண்டால் உடலை பெற்றுக் கொள்கின்றோம் என்று போராட்டக் குழுவினர் தெரிவித்து வந்தனர். அன்று முதல்  எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத நிலையில்  தமிழ் தேச மார்க்சிய கழகத்தினர், இறந்த மாரிமுத்துவின் உறவினர்கள்  தேனி மாவட்ட நிர்வாகம், பெரியகுளம் காவல்துறையை கண்டித்தும்   பல்வேறு ஆர்ப்பாட்டம் போராட்டங்கள் நடத்தினர்.  
         மேலும் ஆக.21ம் தேதியுடன் 16 நாட்கள் ஆன நிலையில்  இறந்த மாரிமுத்துவின் உடலை  அவரது உறவினர்கள் வாங்க மறுத்ததால்  அதனை பெரியகுளம் கோட்டாட்சியர் முத்து மாதவன் முன்னிலையில்  எடுத்து நல்லடக்கம் செய்து விடுவோம் என  அதிகாரிகள் மட்டத்தில் இறந்த மாரிமுத்துவின் உறவினர்களுக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். 
         இந்த தகவலை அடுத்து ஆக.21ம் தேதி  மாலை  மாரிமுத்துவின் உறவினர்கள் மாரிமுத்துவின் உடலை நல்லடக்கம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளனர். ஆக.21-ம் தேதி  காலையில்  பெரியகுளம் பகுதியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அபிநவ் குமார் வருகை புரிந்து பெரியகுளம் உட்கோட்ட காவல்துணை  கண்காணிப்பாளர் அலுவலகத்தில் முகாமிட்டிருந்தார். 
        மேலும்  திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் மற்றும் ADSP, DSP, காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவல் ஆளிநர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பெரியகுளம் பகுதியில் குவிக்கப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது. 
         இந்நிலையில் ஆக.21ம் தேதி  மாலை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்து இறந்த மாரி முத்துவின் உடலை  நல்லடக்கம் செய்ய காவல் துறையினரின் கடும் பாதுகாப்பின்கீழ் ஆம்புலன்ஸ்சுக்கு முன்பும் பின்பும்  காவல்துறையினர் வருவாய்த் துறையினர் என பத்திற்கும் மேற்பட்ட வாகனங்களின்  அணிவகுப்பின்  மூலம்  பெரியகுளம் நகராட்சி பொது மயானத்திற்கு  மாரிமுத்துவின் உடலை கொண்டு வந்தனர்.   
          பெரியகுளம் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு  இறந்த மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும்  தமிழ் தேச மார்க்சிய கழகத்தினர் மாரிமுத்துவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஆண்களும், பெண்களும் காத்திருந்த நிலையில் மின்னல் வேகத்தில் மாரிமுத்துவின் உடலை ஏற்றிவந்த ஆம்புலன்ஸ் மயான பகுதிக்குள் சென்றது. இதனால் இறுதி அஞ்சலி செய்ய முடியாத ஆண்களும், பெண்களும் காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். அவர்களை காவல்துறையினர் தரதரவனெ  இழுத்துச் சென்று  காவல்துறையின் வாகனத்தில் ஏற்றி பெரியகுளம்  காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
         பின்பு நகராட்சி பொது மயானத்திற்கு மாரிமுத்துவின் உடலைக் கொண்டு சென்று அங்கு ஏராளமான காவல் துறையினரின்  முன்னிலையில் இறந்த மாரி முத்துவின் உறவினர்கள்  உடலை நல்லடக்கம் செய்தனர்.
       மேலும் இதுவரையிலும் தமிழ் தேசமார்க்சிய  கழகத்தினர் இறந்த மாரி முத்துவின் உறவினர்கள் மீது  4 முறை காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர் .  
        பெரியகுளம் பகுதி முழுவதும் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது .

Comments