வேலூர், ஜன.22-வேலூர் மாவட்டம்,
காட்பாடி அடுத்த விருதம்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் தை அமாவாசையை முன்னிட்டு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
வேலூர் மாவட்டம், காட்பாடி காவல் சரகத்திற்கு உட்பட்ட, விருதம்பட்டு காவல் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றுபவர் ஆதர்ஷ். இவர் கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாக ஏழை, எளியவர்களுக்கு சனிக்கிழமை அன்று நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இலவசமாக அன்னதானம் வழங்கி வருகிறார்.
அதேபோன்று நேற்று சனிக்கிழமை மற்றும் தை அமாவாசை அன்று நூற்றுக்கும் மேற்பட்ட ஏழைகளுக்கும் மற்றும் வயது முதிர்ந்த உழைத்துப் பிழைக்க முடியாத நபர்களை தேர்வு செய்து காங்கேயநல்லூர் கல்யாண மண்டபம் பேருந்து நிறுத்தம் அருகில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்ந்தார்.
இதன் மூலம் இவர் கருணையின் நிறம் காக்கி என்பதை மீண்டும் நிரூபித்துக் கொண்டு வருகிறார். காவல்துறையினரைக் கண்டு பொதுமக்கள் பயந்து அஞ்சி நடுங்குவது மறைந்து விட்டது. இன்று மனிதநேயத்துடன் அன்னதானம் வழங்க தொடங்கியுள்ள இந்த உதவி காவல் ஆய்வாளரை பொதுமக்கள் அன்னதானத்தை பெற்றுக்கொண்டு மனதார வாழ்த்தி விட்டுச் செல்வதை காண முடிகிறது. இயலாதவர்களுக்கு அன்னதானம் வழங்குவது தனக்கு பேரின்பத்தை வழங்குவதாக காவல் உதவி ஆய்வாளர் ஆதர்ஷ் கூறுகிறார். இப்படியும் காவல் துறையில் அதிகாரிகள் பணியாற்றுவது காவல்துறையின் நற்பெயருக்கு மேலும் ஒரு வைரக்கல் பதித்தது போல ஆகிறது என்று சொல்லலாம். உண்மையில் காவல்துறை உங்கள் நண்பன் என்பதை நிரூபித்து வருகிறார் உதவி காவல் ஆய்வாளர் ஆதர்ஷ் என்று சொன்னால் அது மிகையாகாது. அவரது பணி தொடர சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

Comments
Post a Comment